பதிவு செய்த நாள்
23
அக்
2017
12:10
கோவை: இரவு நேர படுக்கைக்கு முன் பாட்டிமார்களின் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அதில் தவறாமல் இடம்பெறும் ராமாயணக் கதைகளில், ஆஞ்சநேயரின் விந்தைகளையும், அற்புதங்களையும் கேட்டு வியக்காத நாளில்லை. ராமன், சீதையின் வாழ்க்கையையும், துயரங்களையும், எத்தனையோ பேர் எவ்வளவோ விதங்களில் எழுதியுள்ளனர். சீதையின் பார்வையில் ராமாயணம், ராவணனின் கண்ணோட்டத்தில் ராமாயணம் என எத்தனையோ வழிகளில் ராமாயணத்தை படித்தும், கேட்டும் வந்த நமக்கு, வித்தியாசமான சித்திரக்கதை வடிவில், எளிய ஓவியத்தில் ராமாயணத்தை சொல்லியிருக்கிறது தபால்துறை.
பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், தலைவர்கள், பண்பாடு, கலாசாரம் ரீதியான விஷயங்களுக்கு சிறப்பிக்கும் வகையில் அரிய நினைவு தபால் தலைகளை வெளியிட்டு வரும் தபால்துறை, முதல் முறையாக புராணக் கதைகளுக்குமுக்கியத்துவம் தரும் வகையில், ’ராமாயணத்தை’ மையமாகக் கொண்டு அரிய தபால்தலைகளை வெளியிட்டுள்ளது. ராமாயணக்கதையில் வரும் சிறப்புமிக்க காட்சிகளை அழகோவியமாக தீட்டப்பட்ட விதம் பாராட்டுக்குரியது. மொத்தம், 11 சிறப்பு தபால்தலைகளும், ஒரு சிறப்பு தபால் உறையும் வெளியிடப்பட்டுள்ளது. தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’புராணக் கதைகளுக்கு தபால்தலை வெளியிடுவது இதுவே முதல் முறை. இதை விட எளிய வடிவில் படங்கள் வாயிலாக கதைச்சுருக்கத்தை சொல்ல முடியாது. ராமாயணத்தை தபால்தலைகள் மூலமே எளிதில் குழந்தைகளுக்கு சொல்லிவிடலாம். இது அனைத்து தபால் தலை சேகரிப்பு நிலையங்களிலும் விற்பனையாகின்றன. ஒரு தபால்தலையின் விலை ரூ.5 மட்டுமே’ என்றார்.