நபிகள் நாயகம் நீண்ட நேரம் தொழுகை நடத்த மாட்டார். மிக குறுகிய காலத்திலும் முடிக்க மாட்டார். ஒரு முறை அவர் அபூகதாதா(ரலி) என்பவரிடம் கூறும்போது, நீண்ட நேரம் தொழ வேண்டுமென எனது உள்ளம் விரும்புகிறது. ஆனால், தொழுகை நடக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு குழந்தை அழுகின்ற குரல் என் காதில் விழுகிறது. எனவே நான் தொழுகையை சுருக்கமாக்கிக் கொள்கிறேன். நீண்ட நேரம் தொழுகை நடத்தினால் அந்த குழந்தையின் தாய்க்கு சிரமமாக இருக்கும். அந்தத் தாயை சிரமத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை, என்றார்.
நீண்ட நேரமாக சிலர் திருமறை ஓதுவர். அவர்கள் பெண்களின் நிலைமையை கருத்தில் கொண்டு ஓரளவிற்கு சுருக்கமாக தொழுகையை முடித்து விட்டால் நலமாக இருக்கும்.தொழுகையை சுருக்கமாக முடிக்கும் அதே சமயம், நாயகம் நீண்ட நேரமாக தொழுகையின்போது நின்று கொண்டிருப்பார். இதுபற்றி முகீரா (ரலி) என்பவர் கூறும்போது, தன்னுடைய இரண்டு கால்களும் வீங்கும் அளவிற்கு நாயகம் தஹஜ்ஜுத் தொழுகையில் நின்று கொண்டிருப்பார். அவரை பார்க்கும் மக்களெல்லாம், நீங்கள் இவ்வளவு சிரமப்படவேண்டிய அவசியம் என்ன? எனக் கேட்பார்கள். அதற்கு நாயகம், நான் இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய அடியவனாக இருக்க விரும்புகிறேன், என பதில் சொல்வார்.
ஒருமுறை தொழுகை நடக்கும்போது முஆவியா(ரலி) என்பவருக்கு தும்மல் வந்து விட்டது. தும்மல் வந்ததும் அவர் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) எனக் கூறினார். மக்கள் தும்மல் வந்த திசையை நோக்கி பார்த்தனர். உடனே முஆவியா (ரலி) அந்த மக்களை நோக்கி, நீங்கள் ஏன் என்னை இப்படிப் பார்க்கிறீர்கள்? எனக்கேட்டார். அவர்கள் முஆவியாவை நோக்கி தொழுகையின் போது அமைதியாக இருங்கள், எனக் கூறினர். இதை நாயகம் கவனித்தார். தொழுகை முடிந்ததும், தொழுகையின்போது பேசுவது சரியல்ல. தொழுகை என்பது அல்லாஹ்வின் மகிமையை எடுத்துக்கூறுவதற்கும், திருக்குர்ஆன் ஓதுவதற்கும் மட்டுமே உரிய நேரமாகும், என்றார். தொழுகையின் போது மற்றவர்களின் செய்கையை கவனிக்க வேண்டாம் என்பது நாயகத்தின் கருத்து.