பதிவு செய்த நாள்
24
அக்
2017
11:10
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் மலை மீது, அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விசேஷ நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குன்றத்துார் மலை குன்றின் மீது, பிரசித்தி பெற்ற, சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், இங்கு சுவாமியை வழிபடு கின்றனர்.முகூர்த்த நாட்களில், ஏராளமான திருமணங்களும் நிகழ்கின்றன.கோவிலுக்கு செல்ல, 84 படிகளுடன் வழியும், வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உள்ளது. இந்நிலையில், கந்த சஷ்டி விழா நடப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், படிக்கட்டு வழியே செல்வதை தவிர்த்து, சாலை வழியில் வாகனங்களில் செல்கின்றனர். கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி, கோவில் பகுதியில் இல்லை. இதனால் சிலர், தங்கள் வாகனங்களை சாலையோரத்திலேயே நிறுத்தி, கோவிலுக்கு செல்கின்றனர். வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார், கோவில் நிர்வாகத்தினர் என, யாரும் பணியில் இல்லாததால், பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விசேஷ நாட்களில் மலை மீது அதிக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.