பதிவு செய்த நாள்
24
அக்
2017
11:10
பொன்னேரி : நாக சதுர்த்தியை முன்னிட்டு, தேவத்தம்மன் ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலின் மரம், திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பொன்னேரி அருகில் உள்ள தேம்மா நகர் பகுதியில், தேவத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, 52ம் ஆண்டு நாக சதுர்த்தி விழா, வெகு விமரிசையாக நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேவத்தம்மன் ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.கோவிலின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் பெண்கள் மஞ்சள் கயிறு களை கட்டியும், பால் ஊற்றியும் வணங்கினர். அப்போது, மரத்தில் இருந்து, புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மரத்தின் உட்பகுதியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் அங்கு சென்று, மரத்தின் உட்பகுதியில் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கோவில் மரம் எப்படி திடீரென தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். மரம் திடீரென தீப்பிடித்ததால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.