சபரிமலை:சபரிமலை தரிசனத்துக்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கியது. இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் சரங்குத்தி வழியாக அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்காது. சபரிமலையில் கட்டுக்கடங்காமல் வரும் பக்தர்களை முறைப்படுத்த கேரள போலீஸ் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது விருச்சுவல் கியூ. இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்களுக்கு கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை பம்பையில் இதற்கான கவுண்டரில் கொடுத்தால் ஒரு டோக்கன் கிடைக்கும். அந்த டோக்கனுடன் செல்லும் பக்தர்கள் சரங்குத்தி வழியாக சென்று நீண்ட நேரம் கியூவில் நிற்க வேண்டியிருக்காது. மரக்கூட்டத்தில் இருந்து சந்திராங்கதன் ரோடு வழியாக பெரிய நடைப்பந்தல் சென்று விடமுடியும். இங்கும் ஒரே ஒரு கம்பி தடுப்புக்குள் நின்று, 18-ம் படிக்கு சென்று விட முடியும். இந்த திட்டத்துக்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் ஆண்டுக்கு ஆண்டு இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மண்டல காலத்துக்கான முன்பதிவு மட்டும் தற்போது தொடங்கியுள்ளது. www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.