பதிவு செய்த நாள்
28
அக்
2017
11:10
பழநி: பழநி முருகன்கோயில் ரோப்கார் ஆண்டுபராமரிப்பு பணிகள் முடிந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்குவதற்காக பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடக்கிறது. பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் செல்லும் வகையில் ‘‘ரோப்கார்’ தினமும் காலை 7:00 மணி – இரவு 8:30 மணி வரை இயக்கப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக செப்.,12ல் நிறுத்தப்பட்டது. ரோப்காரில் கம்பிவடம் நன்றாக உள்ளதால் அதனை மாற்றவில்லை. மேல்தளத்தில் புதிய ஷாப்ட் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் ரோப்கார் இயக்கத்தின் போது அதிர்வலைகளை கண்டறியும் சென்சார் கருவிகள் கீழ்தளத்தில் ஆறும், மேல்தளத்திலும் இரண்டும் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் ஷாப்ட் பழுது, பல்சக்கரம், கம்பிவடம், உருளை தேய்மானம் உள்ளிட்ட பழுதுகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு கம்பிவடம் மட்டும் இயக்கியும், பின்அதில் வெறும் பெட்டிகள் பொருத்தியும் நேற்றுமுதல் சோதனை ஓட்டம் நடக்கிறது. சிலநாட்களில் ‘‘ரோப்கார்’ பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரஉள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், ‘‘ரோப்கார் பராமரிப்பு பணியில் சோதனை ஓட்டம் நடக்கிறது. சென்னையில் இருந்து ரோப்கார் கமிட்டி குழுவினர் பார்வையிட்டு ஆய்வுசெய்ய உள்ளனர். அதில் பக்தர்கள் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டு, வரும் அக்.,30 அல்லது நவ.,1ல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,’’ என்றார்.