பதிவு செய்த நாள்
03
நவ
2017
10:11
கீழக்கரை: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது.
பச்சை மரகத நடராஜர் சன்னதி, பிரகார மண்டபம், மங்களேஸ்வரி அம்மன் அர்த்த மண்டபம், முதல் பிரகாரத்தில் உள்ள தபசு மண்டபம் ஆகிய இடங்களில் மூலிகையால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் காண்போரின் மனதை கவர்வதாக அமைந்துள்ளது.
கி.பி., 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் வரையப்பட்ட இந்த மூலிகை ஓவியம், தற்போது பொலிவிழந்து, வண்ணங்கள் நிறம் குறைந்தும், சிதில மடைந்தும் காணப்படுகிறது. மரகத நடராஜரின் சன்னதி முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட 12 ராசிகள், நவ கிரகங்களின் உருவபடத்தின் வரிசைகள், உத்தரகோச மங்கை உருவான ஸ்தல வரலாறு குறித்த விஷயங்கள் ஓவிய வடிவில் தீட்டப்பட்டுள்ளது.
தபசு மண்டபத்தில் அம்மன், எவ்வாறு சிவனை அடைய வேண்டி தாம் பட்ட கஷ்டங்கள், தவக் கோலங்கள் உள்ளது. உப்புக்காற்று, வாடைக்காற்று, சீதோஷ்ண நிலை இவற்றை பல் வேறு கால கட்டங்களை கடந்து வருகிறது.
எனவே இந்துசமய அறநிலையத்துறையினர் கோயிலில் உள்ள மூலிகை ஓவியங்களை, பழமை மாறாமல் மீண்டும் புதுப்பொலிவு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.