பதிவு செய்த நாள்
10
நவ
2017
11:11
சென்னிமலை: முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. சென்னிமலையை அடுத்த, முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த, 1ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலையில், காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பூஜை நடத்தினர். இதை தொடர்ந்து உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து பொங்கல் வைபவம் நடந்தது. நூற்றுக்கணக்கான மக்கள், ஆடு, கோழி பலியிட்டு அம்மனை வழிபட்டனர். மாலையில், குழந்தைகள் சேறு பூசி வேஷமிட்டு, அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றினர். மாலை, 4:00 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொடர்ந்து சுற்று பகுதியில் உள்ள, 14க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.