பதிவு செய்த நாள்
10
நவ
2017
12:11
கோவை : பீளமேட்டில் புதியதாக கட்டப்பட்ட, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலின் மகா சம்ப்ரோக் ஷண பெருவிழா நேற்று நடந்தது. பீளமேடு பகுதியில், உள்ள ஆதிவிநாயகர் கோவில் மிகவும் தென்மை வாய்ந்தது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக, கல்யாண முருகனாக காட்சியளிக்கிறார்.
சண்முகப்பெருமான் ஆறுமுகங்களோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் புதியதாக, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னிதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மகா சம்ப்ரோக் ஷண விழா நேற்று நடந்தது. முன்னதாக, யாகசாலையில் வேள்வி நிறைவு செய்யப்பட்டது. காலை 5:30 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை, கும்பபூஜை, வேதிகாபூஜை, துவாரபூஜை, மூலமூர்த்திகளுக்கு நாடிசந்தானம், மகாபூர்ணாஹுதியும், மகா தீபாராதனையும் நடந்தன. காலை 7:30 மணிக்கு யாத்ரா தானமும்,காலை 7:45 மணிக்கு யாகவேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை யாக குண்டங்களிலிருந்து எடுத்து, எழுந்தருளுவிக்கப்பட்டு, கோபுர கலசங்களின் மீது சிவாச்சாரியர்களும், பட்டாச்சாரியர்களும் ஊற்றினர். கூடியிருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.