மயிலாடுதுறை தரங்கம்பாடி வழியில் அமைந்துள்ள தலம். இங்கு முருகப்பெருமான் பாபநாச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார் என்பது புராண வரலாறு சூரனின் மகனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த இடமென்றும் சொல்லப்படுகிறது. இத்தலத்திலுள்ள அனைத்து மூர்த்திகளும் சுப்பிரமணிய சொரூபமாகவே காட்சிதருகின்றனர். சிவன்கோயில் அமைப்பில் அமைந்த திருக்கோயிலில். சோமாஸ்கந்த மூர்த்தி இருக்கவேண்டிய சன்னிதியில் முருகப்பெருமான் வள்ளி, தேவசேனா சமேதராய் எழுந்தருளியுள்ளார். நடராஜப் பெருமான் எழுந்தருள வேண்டிய சபா மண்டபத்தில் முருகப் பெருமான் இடக்கையில் வில்லுடனும், வலக்கையில் வேலுடனும் காட்சிதருகிறார். முருகப்பெருமான் கருவறையினுள் பாபநாசம் பெருமான் சன்னிதி உள்ளது. இது இக்கோயிலுக்கு தனிச்சிறப்பாகும். முருகப்பெருமான் திருமுன்பு ஸ்படிகலிங்கம் காணப்படுகிறது.