பதிவு செய்த நாள்
17
நவ
2017
11:11
மதுரை: சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் துவங்கிய நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வரவுள்ளனர். அவர்களின் வசதிக்காக கட்டண வாகன காப்பகம், குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி, சமையல் கூடம், குடிநீர், குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சபரிமலை மண்டல, மகர பூஜை காலங்களான நவம்பர், டிசம்பர், ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நுாற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வருவர். மண்டல விரத பூஜை இன்று (நவ.,17) துவங்குகிறது. எனவே அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து கொண்டே செல்லும். பக்தர்கள் வசதிக்காக எல்லீஸ்நகர் ரோட்டில் 300 வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டண வாகன காப்பகம் 24 மணி நேரமும் கோயில் சார்பில் செயல்படுகிறது. பஸ், மினி பஸ் கட்டணம் 200 ரூபாய். வேன் 50 ரூபாய், கார் 30 ரூபாய் என 12 மணி நேர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகன காப்பக வளாகத்தில் ஒரே நேரத்தில் 500 பேருக்கு பயன்படும்படி மெகா சமையல் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் சார்பில் 17 இலவச கழிப்பறைகள், 11 குளியலறைகள் மாநகராட்சி சார்பில் தயார் நிலையில் உள்ளன.
ரூ.75 கட்டணத்தில் விடுதி: கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: வாகன காப்பகம் எதிரேயுள்ள தங்கும் விடுதியில் 4 படுக்கைகள் கொண்ட அறைக்கு 24 மணி நேர கட்டணம் 900 ரூபாய். இரு படுக்கைகள் கொண்ட அறை 300 ரூபாய். பலர் தங்கும் பொது அறையில் படுக்கை ஒன்றுக்கு 75 ரூபாய். 50 பேருக்கான படுக்கை அறைக்கு 3,750 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு கிடையாது. குடிநீர் வசதி உண்டு. கென்னட் ரோட்டில் செவ்வாய் தோறும் காய்கறி மார்க்கெட் நடக்கிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் நியமித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகன காப்பகத்தில் 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.
தரிசன சுற்றுலா பஸ் வசதி: வாகன காப்பகத்தில் இருந்து கோயிலுக்கு சிட்டி பஸ்கள் இயக்கப்படுகின்றன. கட்டணம் 10 ரூபாய். இங்கிருந்து மீனாட்சி அம்மன் கோயில் தவிர அழகர்கோவில், திருப்பரங்குன்றம், திருவாதவூர் போன்ற புராதன சிறப்பு மிக்க வழிபாட்டு தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. பழங்காநத்தம் ரவுண்டானா, காளவாசல் சிக்னலில் இருந்தும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சிட்டி பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது. மாநகராட்சி சார்பில் பழங்காநத்தம் ரவுண்டானா, போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், டி.பி.கே.,ரோடு பகுதிகளில் கட்டண அடிப்படையில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு நடக்கிறது.
வேன்களுக்கு கிராக்கி: சபரிமலை செல்ல இப்போதே வேன்களை முன்பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளில், பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வாடகை சுற்றுலா வேன்களில் கி.மீ., அடிப்படையிலும், நாள் அடிப்படையிலும் வாடகை வசூலிக்கப்படுகிறது.