பதிவு செய்த நாள்
17
நவ
2017
11:11
சென்னிமலை: சென்னிமலை முருகனுக்கு நடந்த, தீர்த்தாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆதி சைவ அர்ச்சகர்கள் அறக்கட்டளை, சென்னிமலை ஆண்டவர் பாதயாத்திரை தீர்த்தாபிஷேக குழு சார்பாக, 18ம் ஆண்டு தீர்த்தாபிஷேக விழா நேற்று நடந்தது. இதற்காக, 14ல் மாலை பவானி சென்றனர். அங்கு காவிரி தீர்த்தம் எடுத்துக் கொண்டு, பாதயாத்திரையாக, 15ல் காலை பெருந்துறை வந்தனர். அங்கிருந்து மாலை புறப்பட்டு, சென்னிமலை கைலாசநாதர் கோவில் வந்து இரவில் தங்கினர். நேற்று காலை, தீர்த்தக்காவடி புறப்பட்டு, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, குதிரையுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, மலைக்கோவிலை அடைந்தனர். கோவிலில் விநாயகர் வழிபாடு, கலச ஆவாஹனம் மற்றும் பூர்ணாகுதி நடந்து, சென்னிமலை மூலவருக்கு, தீர்த்தாபிஷேகம் நடந்தது. பின், அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது. இதை தொடர்ந்து, குலகுரு கல்யாணபுரி கூனம்பட்டி ஆதினம் இளவரசு ஸ்ரீலஸ்ரீ சரவண மாணிக்கவாசக சுவாமிகளின் அருளாசி உரை நடந்தது. ஏற்பாடுகளை ஆதி சைவ அர்ச்சகர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் தபராஜா குருக்கள், ராஜப்பா குருக்கள், சிவராஜ குருக்கள் ஆகியோர் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர்.