காரையூர் பெருமாள் கோயிலில்13ம் நூற்றாண்டு கல்வெட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2017 12:11
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே காரையூரில் பெருமாள் கோயில் கருவறையில் 13 ம் நுாற்றாண்டு கல்வெட்டுகளில் சடையவர்மன் சுந்தரபாண்டின் காலத்தில் திருப்பணிக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைதெரியவந்துள்ளது. காரையூரில் அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும்காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி வரலாறு உதவி பேராசிரியர் வேலாயுதராஜா ஆகியோர் கல்வெட்டு களஆய்வுகளை மேற்கொண்டனர். கருவறை மற்றும் மகாமண்டபத்தின் தெற்குபகுதியைச் சுற்றிலும்உள்ள கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன.
இக்கல்வெட்டுக்கள் அனைத்தும் கி.பி. 1251 முதல் 1268வரைபாண்டிய நாட்டை ஆண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தியவை என்பது கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் பாண்டிய வம்சத்து மன்னர்களிலேயே தலை சிறந்தவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் சிதம்பரம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய கோயில்களுக்கு பொன்னால் ஆன கூரை வேய்ந்து கொடுக்கப்பட்டது. அதனால் இவர் பொன் வேய்ந்த பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது மூன்றாம் ஆட்சி ஆண்டைக் குறிக்கும் இக்கல்வெட்டுக்கள், இம்மன்னனின் அரசு அதிகாரி சந்திராதித்தவர் என்பவரின் சொல்படி பனைவயல் என்னும் கிராமத்தில் எட்டு முக்காணி புரவு நிலம் இங்குள்ள அழகிய மணவாளப்பெருமாள் கோயிலின் திருவாராதனத்துக்கும் திருப்பணிக்கும் இறையிலியாக கொடுத்ததை இக் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் சோழபாண்டிய வளநாட்டு திருவிடையாட்டம் காரையூர் எனக் கல்வெட்டுக்களில் தெரியவந்துள்ளது. பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டை கைப்பற்றி வெற்றி கொண்டதால்இப்பகுதி சோழபாண்டிய வளநாடு என அளிக்கப்பட்டுள்ளது.பொதுவாக மன்னர்களால் சிவன் கோயிலுக்கு அளிக்கப்படும் நிலக்கொடைகள் தேவதானம் என்றும் பெருமாள் கோயிலுக்குஅளிக்கப்படும் நிலக்கொடைகள் திருவிடையாட்டம் எனவும் அழைக்கப்படும்.
மகா மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டிலும் இம்மன்னனின் பட்டப் பெயர்களான அவனி வேந்த மாறன், கோச்சடை வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி என்ற பெயர்களும் காணப்படுகிறது.அவனி முழுவதற்கும் இவன் அதிபதியாக இருந்ததால் இவன் அவனிவேந்த மாறன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் சுந்தர பாண்டிய மன்னனின் திரு நாமத்தால் சந்திராதித்தர் சொல்வதாக அழகிய மணவாளப்பெருமாள் கோயில் திருப்பணிக்காக அவனிவேந்த ராமன் சந்திக்கு (வழிபாட்டிற்கு) இருபத்தைந்து அச்சு (பழங்காசு) கொடுத்ததாகவும் இக்கல்வெட்டு கூறுகிறது. மணக்குடி, உகளூர், பனைவயல் மற்றும் முருகனேரி ஆகிய கிராமங்களிலும் இக்கோயிலுக்கான திருவிடையாட்டம் எனப்படும் இறையிலி நிலங்கள் இருந்ததாக இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்ட ஒரு கோயில் தளமும் அதன் அருகே விநாயகர் மற்றும் நந்தி சிற்பங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.