பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
பழநி: பழநி முருகன்கோயிலில் காப்பு கட்டுதலுடன் கார்த்திகை தீபத்திருவிழா நவ.,26ல் துவங்குகிறது. இதையொட்டி டிச.,2ல் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் நவ.,26ல் மாலை சாயரட்சை பூஜைக்குபின் மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது. விழாநாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலைபூஜை, சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. தினமும் சின்னக்குமாரசுவாமி, தங்கசப்பரத்தில் திருவுலா வருகிறார். யாகசாலை பூஜைக்குபின் தினமும் 7.30மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும்.
தங்கரதம் நிறுத்தம் : டிச.,2ல் கார்த்திகையை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும். அன்று மாலை 6 மணிக்கு சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். மலைக்கோயிலில் நான்கு பக்கங்களிலும் தீபங்கள் மற்றும் மேற்கு தீபக்கம்பத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட உள்ளது. இதனால் அன்று இரவு தங்கரத புறப்பாடு கிடையாது. விழா ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.