பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
நாமக்கல்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கை விளக்குகள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடக்கிறது. கார்த்திகை தீபத் திருநாள், டிச., 2ல் கொண்டாப்படுகிறது. அன்றைய தினம், பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கோவில்களில் தீபம் ஏற்றி, சுவாமியை வழிபாடு செய்வர். அவ்வாறு ஏற்றப்படும் விளக்குகள் தயரிக்கும் பணி, முழுவீச்சில், சேந்தமங்கலம் அடுத்த, போடிநாயக்கன்பட்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விளக்குகள், பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து, விளக்கு தயாரிக்கும் பானுமதி மற்றும் பாண்டியம்மாள் கூறியதாவது: புதுச்சத்திரம், ஏளூர், அகரம் மற்றும் கரியபெருமாள் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணால், கை விளக்கு செய்கிறோம். அச்சு விளக்கு வரத்தால், கைவிளக்கு விற்பனை குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு, 2,000 முதல், 3,000 விளக்குகள் தயாரிப்போம். 1,000 விளக்குகள், 750 முதல், 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. விலை சற்று கூடுதலாக இருந்த போதிலும், கை விளக்கில் தான் சுவாமிக்கு விளக்கேற்ற வேண்டும் என்ற ஐதீகம் உள்ளதால், விற்பனை சூடுபிடித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.