பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
திருவண்ணாமலை: பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து, திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கும் அன்னதானத்திற்கு நிதி வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, டிச., 2 ல் நடக்கிறது. அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதானம் வழங்குவர். இந்தாண்டு, பக்தர்களுக்கு நேரடியாக அன்னதானம் வழங்க, கலெக்டர் கந்தசாமி தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு, பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த தடையை நீக்கி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அன்னதானம் வழங்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள், முன் கூட்டியே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் அன்னதானம் வழங்குவோர், வரும், 17 முதல், 25 வரை, திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து, முன் அனுமதி பெற வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், ஐந்து பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் முகவரி குறித்த சான்று இணைக்க வேண்டும். அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. இலையால் ஆன தொன்னை மற்றும் பாக்கு மட்டை பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். கழிவு பொருட்களை போட வசதியாக, குப்பை கூடைகள், சாக்குப்பைகளை, அன்னதானம் அளிப்பவர்களே எடுத்து வந்து, கழிவு சேர்த்த பின், அதை அப்புறப்படுத்த வேண்டும். அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரடியாக அன்னதானம் வழங்க இயலாதவர்களுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நன்கொடை பெற்று அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், திருவண்ணாமலை நகரம், ஆணாய் பிறந்தான், அடி அண்ணாமலை, கோசாலை, வேங்கிக்கால் ஆகிய இடங்களில், மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் உணவு தயாரித்து, அன்னதானம் வழங்கப்படும். நன்கொடை வழங்க விரும்புவோர், அதற்கான தொகையை, வங்கி டிடியாக எடுத்து வரும், 30க்குள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக பொது மேலாளரிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம். வங்கி டிடியை, கணக்கு எண், 6571244455, ஐஎப்எஸ்சி ஐடிஐபி000வி105, மாவட்ட கலெக்டர், கார்த்திகை தீபம், திருவண்ணாமலை என்ற பெயரில் எடுத்து, அதை கலெக்டர் அலுலகத்தில் கொடுக்க வேண்டும். நன்கொடை அளிப்பவர்களுக்கு ரசீது வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.