பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
செய்யூர் : செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கார்த்திகை தீப திருவிழாவான, டிச., 2ம் தேதி, செய்யூர் தாலுகாவில், பெருக்கரணை, விளங்காடு, சித்தாமூர் மலைகளில் தீபம் ஏற்றப்படும். பகுதி மக்களும், வீடு, விவசாய தோட்டங்களில், அகல் விளக்கு ஏற்றுவர். இப்பகுதியில், அகல் விளக்கின் தேவை அதிகம் என்பதால், நல்லுார், மேல்பூதுார், மழுவங்கரணை, பையம்பாடி உள்ளிட்ட பல கிராமங்களில், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில், மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, மண்பாண்ட தொழிலாளி, பா.வெங்கடாசலம் கூறியதாவது: கிராமங்களிலும், மண்பாண்டங்கள் பயன்படுத்தும் பழக்கம் குறைந்து விட்டதால், தொழில் நலிவடைந்து வருகிறது. 1985ம் ஆண்டு வரை, தொழில் மிகவும் சிறப்பாக இருந்தது. வாரச்சந்தைக்கு மாட்டு வண்டியில், மண் பாண்டங்களை எடுத்துச் சென்றால், அனைத்தும் விற்றுவிடும். தற்போது, பொங்கல் பானை, கார்த்திகை தீப அகல் விளக்குகள் மட்டுமே விற்பனையாகின்றன. தீப திருவிழாவுக்காக, அகல் விளக்கு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.