பதிவு செய்த நாள்
18
நவ
2017
10:11
குறிச்சி:குறிச்சி கிராம அரவான் திருவிழா நேற்று, அரவான் வீதி உலா மற்றும் களப்பலியுடன் நிறைவடைந்தது.மகாபாரத போரை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமை விழாவான, அரவான் திரு விழா கொண்டாடப்படுகிறது. 14 சமூகத்தை சேர்ந்தவர்களை, இவ்விழா ஒன்றிணைக்கிறது. இவ்வாண்டு விழா, கடந்த 7ம் தேதி மாலை, குறிச்சி முதுப்பார் கோவிலில் பூஜை முடித்தல், ஊர் எல்லை கட்டுதல், அரவானுக்கு உயிர் பிடித்தல் மற்றும் கம்பம் நட்டு பூ சாத்துதலுடன் துவங்கியது. மறுநாள் இரவு, அரவானுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து, 14ல், பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதலும் நடந்தன. கடந்த 15ல், அரவான் அலங்கரிக்கப்பட்டு உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலிலிருந்து அரவான் எழுந்தருளுதல் நடந்தது. தொடர்ந்து, குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி, சிறப்பு வழிபாட்டுடன் அரவான் புறப்படுதல் நடந்தது. இரவு அரவான் கோவிலில், பொங்கியம்மனுடன் திருமண விழா நடந்தது.நேற்று முன்தினம் முக்கிய விழா துவங்கியது. இரவு குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு சீர்முறை வழிபாடு முடித்து அரவான் புறப்படுதல் நடந்தது.
நேற்று காலை, மண் முகத்துடன் அரவான் திருவீதி உலா துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக வந்த உலா, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, சுந்தராபுரம் அரவான் மேடையை வந்தடைந்தது. திரளானோர் அரவான், பொங்கியம்மன் மற்றும் அனுமனை வழிபட்டு சென்றனர்.தொடர்ந்து களப்பலி மேடைக்கு செல்லும் வழியில் பெருமாள் கோவில் அருகே, அரவானுக்கு கிருஷ்ணர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, அரவான் களப்பலியுடன் விழா நிறைவடைந்தது.விழா முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.