பதிவு செய்த நாள்
18
நவ
2017
10:11
சென்னை: தர்மபுரி மாவட்டம், ராயக்கோட்டைக்கு அருகில் உள்ள கெட்டூர் மலைக் குகையில், பழமையான பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. தொல்லியல் ஆய்வாளர்கள், அறம் வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து, கெட்டூர் மலைப்பகுதியில் கள ஆய்வு செய்த போது, இந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது: எழுத்துக்கள் தோன்றும் முன், மனிதர்கள், தங்களின் எண்ணங்களை ஓவியங்களாக பதிவு செய்தனர். அவற்றில், மலைக்குகைகளில் உள்ள ஓவியங்கள் மட்டுமே, நமக்கு கிடைக்கின்றன. கெட்டூர் குகைப்பகுதியில், செங்காவி மற்றும் வெள்ளை நிறத்தில், 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. அவை, 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். அதிக அளவில், மயில்களும், அடுத்த நிலையில், யானையின் ஓவியங்களும் உள்ளன. யானையின் மீது அம்புக்குறி வரையப்பட்டுள்ளது. அது, அரசனையோ, தலைவனையோ குறிக்கும். மயில்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாக, கெட்டூர் இருந்திருக்கலாம். நாகர், துளசி மாடம், குதிரையில் அமர்ந்து போரிடுவது போன்ற காட்சிகளும் உள்ளன. இப்பாறை ஓவியங்கள், பழங்கால மனிதர்களின் வாழ்வியல் சாட்சியாக உள்ளன. ஆனால், மலை அடிவாரத்தில், பல ஓவியங்கள் அழிந்தும், மறைந்தும் உள்ளன. இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, தொல்லியல் துறையினர், ஓவியங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.