சபரிமலையில் சிறப்பு தரிசனம் மறுபரிசீலனை : தேவசம் போர்டு தலைவர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2017 12:11
சபரிமலை: சபரிமலையில் 1000 ரூபாய்க்கு சிறப்பு தரிசனம் வசதி செய்யப்பட்டுள்ளது குறித்து மறுஆய்வு செய்யப்படும, என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது தலைமையிலான போர்டு ஊழற்ற நிர்வாகத்தை தரும். தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உதவியாளர்கள் லஞ்ச வழக்குகளில் சிக்காதவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். செவ்வாய், புதன் கிழமைகளில் திருவனந்தபுரத்தில் போர்டு கூட்டம் கூடி சபரிமலை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். சபரிமலையில் அன்னதானத்துக்கு 1,000 ரூபாய் நன்கொடை வழங்கினால் சிறப்பு தரிசனம் நடத்த வசதி செய்யப்படும் திட்டம் அமலில் உள்ளது. இது கடந்த தேவசம்போர்டு எடுத்த முடிவு. சபரிமலையில் அனைவரும் சமம். இதனால் இந்த சிறப்பு தரிசனம் பற்றி அடுத்த போர்டு கூட்டத்தில் மறுபரிசீலனை செய்து புதிய முடிவு எடுக்கப்படும். கோயில்களில் ஆசாரங்களை நிலைநிறுத்தவும், சுத்தமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவசம்போர்டின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலை பற்றி தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.