பதிவு செய்த நாள்
18
நவ
2017
12:11
பெரியகுளம், பெரியகுளம் வரகாநதி வரம் தரும் விநாயகர் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் முழங்க மாலையணிந்து கொண்டனர். பெரியகுளத்தில் கார்த்திகை முதல்நாளான நேற்று பாலசுப்பிரமணியர் கோயில் அருகே வராகநதி வரம் தரும் விநாயகர் கோயில் முன் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை மண்டல பூஜை, மகரஜோதி யாத்திரைக்காக மாலையணிந்தனர். தேனி, கம்பம், போடி, கூடலுார் என பல்வேறு பகுதிகளிலும் மாலையணிந்து கொண்டனர். குருசாமி ஜோதிசாமி கூறுகையில்: பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கன்னிச்சாமிகள் அதிகம் மாலை அணிகின்றனர். டிசம்பர் முதல் ஜனவரி வரை பெரியகுளத்திலிருந்து சபரிமலை செல்ல அரசு பஸ் வசதி செய்து தரவேண்டும் . இதனால் தேனி மாவட்ட ஐயப்ப பக்கதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.
* பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. கம்பம்: நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கம்பம் வழியாக சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் சென்றபடி இருந்தனர். குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், ’ ’கார்த்திகை முதல் நாள் சபரிமலையில் ஐயப்பனை தரிசித்து, தொடர்ந்து ஒருவாரம் சன்னிதானத்தில் தங்கியிப்போம்,’ என்றனர்.