பதிவு செய்த நாள்
21
நவ
2017
11:11
உத்திரமேரூர், : பராமரிப்பின்றி காணப்படும் ருத்ரவாலீஸ்வரர் கோவிலை புனரமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், புல்லம்பாக்கம் கிராமத்தில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, பழமை வாய்ந்த ருத்ரவாலீஸ்வரர் கோவில் உள்ளது. மனநிலை பாதித்தோர், இக்கோவிலில் வழிபாடு மேற்கொண்டால், புத்துணர்ச்சி பெற்று குணமடைவர் என்பது ஐதீகம். சில ஆண்டுகளாக, பராமரிப்பு இல்லாததால், கோவில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் பழுதடைந்துள்ளன. சிமென்ட் பூச்சுக்கள் உதிர்வதால், மழை காலத்தில், தண்ணீர் ஊறி, கட்டடம் பலமிழக்கும் நிலை உள்ளது. இப்படியே இருந்தால், கோவில் இடிந்து விழும். மேலும், கோவில் வளாகத்திற்குள், பூஜை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறும், பராமரிப்பின்றி துார்ந்து கிடக்கிறது. பழமை வாய்ந்த இக்கோவிலை, அறநிலையத் துறை அதிகாரிகள் பராமரித்து, புதுப்பிக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.