வனக்காவலர்கள் இருந்திருந்தால் சபரிமலை உருவாகி இருக்காது : தேவசம்போர்டு தலைவர் கிண்டல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2017 01:11
சபரிமலை: ஐயப்பன் அடர்ந்த காட்டுக்குள் வந்த போது, வனக்காவலர்கள் இருந்திருந்தால் சபரி மலையே உருவாகியிருக்காது. வனத்துறையின் தடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என கேரள தேவசம்போர்டு புதிய தலைவர் பத்மகுமார் கூறினார்.
சபரிமலையில் அவர் கூறியதாவது: பக்தர்களுக்காக 30 லட்சம் டின் அவரணையும், 5.16 லட்சம் பாக்கெட் அப்பமும் இருப்பு உள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் பம்பை முதல் சன்னிதானம் வரை 369 குழாய்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சபரிமலை பணிகளில் ஏற்படும் குறைகளை அதிகாரிகள் மீது திணிக்காமல், தேவசம்போர்டும் தவறுகளுக்கு பொறுப்பேற்கும். சபரிமலையில் பல இடங்களில் சமையல் என்ற நிலையை மாற்றி, ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் அன்னதான மண்டபத்தில் உணவு வழங்கப்படும். தேவசம்போர்டு தலைவரும், உறுப்பினர்களும் இனி அன்னதானத்தில்தான் சாப்பிடுவர். சபரிமலையில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே இந்த முடிவு. தேவசம்போர்டில் அரசியல் பாகுபாடு பார்க்க மாட்டோம். அரசியல் விளையாட்டு விளையாட நினைத்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்.சபரிமலையில் வனத்துறையின் தடை இருக்கிறது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் இந்த காட்டுக்குள் வந்த நேரத்தில், வன காவலர்கள் இருந்திருந்தால் சபரிமலையே உருவாகி இருக்காது. வனத்துறையின் தடைகளை சரிசெய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவோம். அரிவராசனம் பாடலில் உள்ள வித்தியாசங்களை திருத்தி புதிய அரிவராசனம் பாடுவது தொடர்பாக நவ., 30- ல் கர்நாடக இசைக் கலைஞர் ஜேசுதாசுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.