பதிவு செய்த நாள்
22
நவ
2017
09:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று இரவு பிடாரி உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று முன்தினம் இரவு, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று இரவு, 9:00 மணிக்கு, அருணாசலேசுவரர் கோவிலில் உள்ள பரிவார தேவதையான பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, விழா நன்றாக நடக்க வேண்டி, வழிபாடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, பிடாரி அம்மன், புலி வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, விநாயகர் உற்சவம் நடக்கிறது.