பதிவு செய்த நாள்
22
நவ
2017
03:11
உடுப்பி: நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம் சிங்கே, கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் சண்டி ஹோமம் நடத்தி சிறப்பு பூஜை செய்தார். இலங்கை பிரதமர் ரனில் விக்ரம் சிங்கே, தன் மனைவி மைத்ரி விக்ரம் சிங்கேவுடன் நான்கு நாள் சுற்றுபயயணமாக நேற்று இந்தியா வந்தார். கொழும்புலிருந்து பெங்களூரு வந்த அவர், மங்களூரு பஜ்பே விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்தார்.
அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலமாக உடுப்பி அரேசிரூர் ஹெலிபேடில் நேற்று காலை, 11:15 மணிக்கு குடும்பத்துடன் வந்திறங்கினார்.ஆர்.என்.எஸ்., விருந்தினர் மாளிகைக்கு சென்று, சிறிது நேரம் ஓய்வுக்கு பின், கார் மூலம் கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு புறப்பட்டார். கோவிலில் சண்டி ஹோமத்தில் அனைவரும் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர். மதியம், கோவில் சார்பில் வழங்கப்பட்ட உணவு சாப்பிட்டு, பகல், 2:30 மணிக்கு மீண்டும் அரேசிரூர் ஹெலிபேடிலிருந்து மங்களூரு சென்று, அங்கு நேற்றிரவு தங்கினர். மூகாம்பிகையை தரிசிக்க கடந்த மாதம் வந்த, ரனில் விக்ரம் சிங்கே, பலத்த மழையினால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை பிரதமர் வருகையை ஒட்டி, அவர் பயணம் செய்த பகுதிகளில், இலங்கை மற்றும் கர்நாடக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கர்நாடகாவை சேர்ந்த தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலையில், டில்லி செல்லும் ரனில் விக்ரம் சிங்கே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இந்த வேளையில், தமிழக மீனவர் பிரச்னை உட்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து, இரு நாட்டு பிரதமர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.