மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூர் செம்பொன்செய் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது.
108 திவ்ய தேச கோயில்களில் 35வது தலமான செம்பொன்செய் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீஅல்லிமா மலரால் சமேத செம்பொன் அரங்கர் ஏழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசணம் செய்யப்பட்ட இக்கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த 20ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை 5ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து பெருமாள் மற்றும் தாயார் விமானத்தை அடைந்தது. சரியாக 9:30 மணிக்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோயில் அர்ச்சகர் ரமணி மற்றும் அண்ணன் கோயில் மா தவன் ஆகியோர் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்திவைத்தனர். பின்னர் திவ்யப்பிரபந்த பாராயணமும், அதனையடுத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மகா சம்ப்ரோக்ஷணத்தில் முரளீதர சுவாமிகள் மற்றும் கோயில் ஸ்தலத்தார்கள், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தனர்.