பதிவு செய்த நாள்
24
நவ
2017
10:11
சபரிமலை: புல்மேடு பாதையில், பாண்டித்தாவளம் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வருவதால், பக்தர்கள் பயணத்துக்கு வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.கேரளாவில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, குமுளியில் இருந்து சத்திரம், புல்மேடு, பாண்டித்தாவளம் வழியாக தமிழக பக்தர்கள் வருகின்றனர்.
நடப்பு சீசன் துவங்கிய பின், இரண்டு முறை பாண்டித்தாவளம் பகுதியில் யானைகள் கூட்டமாக இறங்கின. இங்கு வியாபாரத்துக்காக கட்டப்பட்டிருந்த ஒரு கூடாரத்தை, யானை உடைத்தது. இதனால் இந்த பாதையில் வரும் பக்தர்களுக்கு வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புல்மேடு வழியாக வருபவர்கள், வன காவலர்கள் அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். வன காவலர்கள் சொல்லும் பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். காட்டின் உட்பகுதியிலும், புல்மேட்டிலும் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. அதிக நேரம் காட்டில் செலவிடக்கூடாது. இதுபோல சன்னிதானத்தில் இருந்து பாண்டித்தாவளம் அருகே அமைந்துள்ள, உரல்குழி தீர்த்தத்தில் மாலை, 6:00 மணிக்கு பின், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதுபோல எருமேலி, அழுதை, கரிமலை வழியாக வரும் பக்தர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளது. கரிமலையில் இருந்து, மாலை 6:00 மணிக்கு பின், பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.