சுவாமிமலை முருகன் கோவிலில் திருகார்த்திகை விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2017 10:11
தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் புகழ்பெற்றது.
தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். பல சிறப்புடைய இத்தலத்தில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாவையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றது.தொடர்ந்து நேற்று காலை கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது வள்ளி - தெய்வாணையுடன் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மங்கலவாத்தியங்கள் முழங்க விழா கொடியேற்றதுடன் தொடங்கியது. பின்னர் சுப்பிரமணியசுவாமி பரிவார தெய்வங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 25ம் தேதி முதல் டிச.1ம்தேதி வரை காலை மற்றும் இரவில் படிச்சட்டம், பல்லக்கு, பூத, ஆட்டுகிடா, வெள்ளிமயில், யானை, காமதேனு, வெள்ளிக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற டிச.2ம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அன்று காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு 9 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவருதலும் தொடர்ந்து திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.