சபரிமலை; சபரிமலை சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்துக்காக மரத்தில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் அப்புறப்படுத்தப்பட்டது. 18-ம் படியேறிய பின்னர் சன்னிதானத்தில் வடக்குப்பகுதிக்கு சென்று அங்கிருந்து வி.ஐ.பி. தரிசனம் செல்ல மரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இது அமைக்கப்பட்ட போது கடும் எதிர்ப்பும், விமர்சனமும் கிளம்பியது. ஆனால் அதை அப்போதைய தேவசம் போர்டு கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் பத்மகுமார், சன்னிதான திருமுற்றத்தில் தேவையற்ற கட்டுமானங்கள் நீக்கப்படும் என்றார். அதன்படி இந்த மேம்பாலம் அகற்றப்பட்டது. இதுபற்றி பத்மகுமார் கூறுகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஷெட்டுகளும் , தேவையில்லாத தடுப்பு வேலிகளும் நீக்கப்படும் என்றார்.