பதிவு செய்த நாள்
30
நவ
2017
11:11
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ரோட்டில், பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், பக்தர்களை வழிமறித்து, கையை பிடித்து இழுத்து வியாபாரம் செய்வதால் பக்தர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த, கோவில் நிர்வாகமும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில், முக்கியத்துவமான ஆன்மிக தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் பூ மிதி விழா, மாதம் தோறும் அமாவாசை, செவ்வாய்மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இதனால், முக்கிய நாட்களில், கோவை, திருப்பூர், மதுரையில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.வேட்டைக்காரன்புதுார் ரோட்டில், கோவில் நுழைவாயில் அருகிலும், கோவிலுக்கு செல்லும் இரண்டு ரோடுகளிலும், பூமாலை, அம்மனுக்கு சாத்தப்படும் சிவப்பு, மஞ்சள் நிற சேலைகள், தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன.
அத்துமீறல்: கோவிலுக்கு வரும் பக்தர்களை, கடைக்காரர்கள் மற்றும் கடை ஊழியர்கள், வழிமறித்து, பூஜை பொருட்கள் அவர்களது கடையில் வாங்குமாறு, கையைப் பிடித்து இழுத்து கட்டாயப்படுத்துகின்றனர். ’செருப்ப விட்டுட்டு போங்க, பூஜை பொருட்களை வாங்கிட்டு போங்க’ எனக்கூறி, பக்தர்கள் ஒவ்வொருவரிடமும் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். கோவில் அருகே, பக்தர்களுக்காக இலவச காலணி பாதுகாப்பகம் உள்ளது. ஆனால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம், கோவிலுக்கு பக்கத்தில் செருப்பை விட முடியாது என, பொய்யான தகவலை கூறி வியாபாரம் செய்கின்றனர்.
மன உளைச்சல்: பூஜை பொருட்கள் விற்பனை உத்திக்காக, வரம்பு மீறி நடந்து கொள்வதால், பக்தர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கடைக்காரர்களுக்குள் வியாபார ரீதியாக போட்டி ஏற்படுவதால், அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. பக்தர்களின் கையை பிடித்து இழுக்கும் போதும், வாக்குவாதம் ஏற்படுகிறது. இது குறித்து, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் பக்தர்கள் புகார் கொடுத்தாலும், யாரும் கண்டுகொள்வதில்லை. மேலும், கடைக்காரர்கள் ஆளுங்கட்சி ஆதரவுடன் இருப்பதால், அத்துமீறல்களை தடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதை தடுக்க, கோவில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸ் இணைந்து, கடைக்காரர்களிடம் பேச்சு நடத்த வேண்டும். ரோட்டை ஆக்கிரமிப்பு செய்யாமல், கடை அமைக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களை வழிமறித்து, கையை பிடித்து இழுத்து வியாபாரம் செய்யக்கூடாது என, அறிவுறுத்த வேண்டும். நடைபாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்து, கண்காணிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு: அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், வரைமுறையின்றி ரோட்டில் நினைத்த இடத்தில் பஸ்சை நிறுத்தி, கோவிலுக்கு வரும் பக்தர்களை இறக்கி, ஏற்றுகின்றனர். மேலும், பூஜை பொருள் விற்பனை கடைக்காரர்களால், பஸ் ஊழியர்கள் கவனிக்கப்படுவதால், குறிப்பிட்ட கடைகளுக்கு அருகில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், ஆனைமலை - சேத்துமடை ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
பாலித்தீன் அரக்கன்: கோவில் ரோட்டிலுள்ள கடைகள் அனைத்திலும், 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பாலித்தீன் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பூஜை பொருட்களை, அந்த பாலித்தீன் கவர்களில் பெற்றுச் செல்லும் பக்தர்கள், பயன்படுத்திய பாலித்தீன் கவர்களை ஆற்றுப்பகுதி மற்றும் கோவில் வளாகத்தில் வீசிச் செல்கின்றனர். இதனால், ஆற்றுப் படுகையில் பாலித்தீன் கழிவு படிந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. ஆற்றுப் பகுதிகளில் தேங்கும் குப்பையை பேரூராட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்யாமல் விடுவதால் ஆறு மாசடைந்து வருகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, கடைகளில், 50 மைக்ரான் தடிமனுக்கு குறைந்த பாலித்தீன் கவர்கள் பயன்படுத்தினால், அபராதம் விதிக்க வேண்டும். பேரூராட்சி நிர்வாகம் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.பழநி மலைக்கோவில் ரோட்டில், இம்ைசக்கு உள்ளாக்கி பொருட்களை விற்பதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதே போன்ற நிலை ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ரோட்டில் நிலவுவதற்குள் அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது பக்தர்கள் எதிர்பார்ப்பு.
புகார் வரவில்லை: போலீசார் கூறுகையில், ’கோவிலுக்கு வரும் பக்தர்களை, தடுக்கவோ, கையை பிடித்து இழுத்து வியாபாரம் செய்யவோ கூடாது. கடைக்கு வெளியில் வந்து வியாபாரம் செய்யக்கூடாது என, கடைக்காரர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் போது, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கடைக்காரர்கள் வரம்பு மீறி நடந்து கொள்வதாக பக்தர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்; இதுவரை புகார் வரவில்லை,’ என்றனர்.
அது, போலீஸ் வேலை!: ஆனைமலை பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் கூறுகையில், ”கோவில் அருகேயுள்ள, பத்து வணிகக்கடைகள் மட்டுமே பேரூராட்சிக்கு சொந்தமானது. ரோட்டோரம் மற்றும் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ளவை தனியாருக்குச் சொந்தமான கடைகள். வணிகக்கடைகளில், பக்தர்களின் கையை பிடித்து இழுப்பதை தடுக்க போலீஸ் மற்றும் கோவில் நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலித்தீன் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.