பதிவு செய்த நாள்
01
டிச
2017
11:12
பழநி, பழநி முருகனுக்கு படி அளந்த பெருமாள் என அழைக்கப்படும், பாலசமுத்திரம் அகோபிலவரதராஜ பெருமாள் கோயிலில் 22 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயிலைச் சார்ந்த, பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் பலநுாற்றாண்டுகள் பழமையான கோயில் ஆகும். இங்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உடனும், பெருந்தேவித்தாயார், ஆண்டாள், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், திருமங்கை ஆழ்வார் சன்னதிகள் உள்ளன. பல நுாறு ஆண்டுகளுக்குமுன் ஜமீன்தாரர்கள் காலத்தில் பழநி மலைக்கோயிலுக்கு பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் இருந்து நித்தியப்படிக்கு வேண்டிய பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறுகின்றனர். இத்திருக்கோயிலில் 1996ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் தற்போது ரூ.95 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்படடன. இப்பணிகள் முடிந்து, 22ஆண்டுகளுக்கு பின் நேற்று காலை 10:15மணிக்கு கோபுர கலசங்களில் புனித கலசநீர் ஊற்றப்பட்டது. காலை 10:35மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இரவு கருடவாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் மண்டல உதவிஆணையர் சிவலிங்கம், முதுநிலைகணக்கு அலுவலர் மாணிக்கவேல், மக்கள்தொடர்பு அதிகாரி கருப்பணன் நகரமுக்கியபிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.