பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
திருக்கழுக்குன்றம் : மிகவும் பழுதடைந்து காணப்படும், நெரும்பூர் திருவாலீஸ்வரர் கோவிலை புனரமைக்க, அறநிலைய துறை நிர்வாகம் முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தில், 900 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி., 11ம் நுாற்றாண்டில், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பழுதடைந்து காணப்படுகிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் சுற்றுப்பகுதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்டவற்றில் செடிகள் வளர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், இக்கோவில் முழுமையாக சீரழிந்து விடும் என, பக்தர்கள் கூறுகின்றனர்.இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரியுள்ளனர்.