பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
திருப்பூர்: கோவில்கள், மடங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை, ஒரு மாதத்துக்குள், கோவில் பெயரில் பட்டா பெற வேண்டும்’ என, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டடங்கள், வீட்டு மனைகள் உள்ளன. கோவில்களில் முறையாக பூஜைகள், விழாக்கள் நடத்த வழங்கப்பட்ட இந்நிலங்கள், முறையாக பராமரிக்காததால், முறைகேடாக பெயர் மாற்றம் செய்து விற்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவில் கூறியிருப்பதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களுக்கு, நிலங்கள், மனைகள் மற்றும் கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றின் உரிமையாளர் என்பதற்கு சான்றாக, வருவாய்த்துறை பட்டா, கோவில் பெயரில் இருக்க வேண்டும். பெரும்பாலான நிலங்களுக்கு, கோவில் பெயரில் பட்டா இல்லை என்று தெரிகிறது. இதை பயன்படுத்தி, பிற நபர்கள், தங்களது பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, பட்டா பெற்றுள்ளனர். அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் பெயருக்கு உடனடியாக பட்டா பெற வேண்டும். 15 நாட்களுக்குள் இதற்கு விண்ணப்பித்து, ஒரு மாதத்துக்குள், கோவில் நிர்வாகிகள் பட்டா பெற வேண்டும். இதில் பிரச்னை இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலருக்கு, மேல்முறையீடு செய்ய வேண்டும். பட்டா பெற விண்ணப்பித்த விபரத்தை தெரிவிப்பதோடு, வருவாய்த்துறை அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.