சபரிமலை: சபரிமலையில் நடை அடைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம், என திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. நவ.16ல் தொடங்கிய பூஜை டிச. 26 வரை தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும். இந் நிலையில் பந்தளம் மன்னர் குடும்பத்தில் ஒரு மூதாட்டி இறந்ததால், பந்தளத்தில் உள்ள வலியகோயிக்கல் சாஸ்தா கோயில் அடைக்கப்பட்டது. அரண்மனையில் திருவாபரண தரிசனம் நிறுத்தப்பட்டது. டிச. 6ல் சுத்தி கலச பூஜைகளுக்கு பின்னர் பந்தளத்தில் வழக்கம் போல் கோயில் நடை திறந்திருக்கும்.
பந்தளத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேறு விதமாக திரிக்கப்பட்டது. பந்தளத்தில் மூதாட்டி இறந்ததால் சபரிமலை நடை டிச.,6 வரை அடைக்கப்பட்டிருக்கும் என்று வதந்தி பரவியது. இதனால் பலர் பயண திட்டத்தை மாற்றினர். ஏராளமானோர் சபரிமலையில் தேவசம்போர்டு மற்றும் பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பேசினர். இது குறித்து தேவசம்போர்டு இதற்கு விளக்கமளித்த பின்னர் வதந்தி ஓரளவு அடங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவேணி பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மூழ்கியது. இதனால் சிறிது நேரம் பம்பையில் இருந்து பக்தர்கள் செல்வது தடைபட்டது. அதன் பின்னர் வழக்கம் போல் பக்தர்கள் சென்று வருகின்றனர். ஆனால் சபரிமலையில் மழை காரணமாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதுபற்றி தேவசம்போர்டு, சபரிமலையில் டிச. 26-ம் தேதி இரவு 10 மணி வரை வழக்கமான நேரங்களில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என்றும், இதில் எந்த மாற்றமும் ஏற்படாது ,என்றும் தெரிவித்துள்ளது.