பதிவு செய்த நாள்
05
டிச
2017
10:12
சபரிமலை: வனப் பகுதியின் மத்தியில் சபரிமலை அமைந்துள்ளதால் தான், இதற்கு சக்தியும், முக்கியத்துவமும் அதிகம், என, கேரள மாநில வனத்துறை அமைச்சர், ராஜு கூறினார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, ராஜு, வனத்துறை அமைச்சராக உள்ளார்.
நேற்று, பம்பைக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்தில் இருந்து, பம்பைக்கு பக்தர்களை அழைத்து வர, வனத்துறை சார்பில் ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள் உணவு, தண்ணீர் போன்ற தேவைகளுக்காக ஊருக்குள் வருகின்றன. விலங்குகளால் மக்களுக்கும், மக்களால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. எனவே தான் விலங்குகள் வந்தால், அதுபற்றி தகவல் தெரிவிக்க, வனத்துறை சார்பில், எஸ்.எம்.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது. வனப் பகுதியின் மத்தியில் சபரிமலை அமைந்துள்ளதால் தான், இதற்கு சக்தியும், முக்கியத்துவமும் அதிகம். நீண்ட துாரம் பயணம் செய்து, காட்டுக்குள் நடந்து வந்து, வழிபடும் கோவில், வேறு எங்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.