பதிவு செய்த நாள்
06
டிச
2017
10:12
சபரிமலை : டிசம்பர் 6 தினத்தையொட்டி, சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காடுகளில் ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடைபெறுகிறது. டிச., 6 தினத்தையொட்டி, சபரிமலையில் நேற்று மதியம் முதல், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அடையாள அட்டை இல்லாதோர், வெளியேற்றப்பட்டனர். சுற்றுப்புறங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் வாசல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் இருமுடி கட்டு தவிர, இதர பைகள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படுகிறது. வெட்டுக்கத்தி, அரிவாள் போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை. கோவில் பகுதி முழுவதும், மத்திய அதிவிரைவு படை மற்றும் கேரள போலீசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. வி.ஐ.பி., தரிசனம் கிடையாது. கோவில் வளாகத்தில் உள்ள நெய் ஊற்றும் இடம், மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நாளை மதியம் வரை அமலில் இருக்கும். சபரிமலை உட்பட, பத்தணந்திட்டை மாவட்ட காடுகள் முழுவதும், ஹெலிகாப்டரில் கண்காணிப்பு நடக்கிறது.
தென்னங்கன்று நடுவதற்கு பணம் வசூலிக்க தடை: சபரிமலை சன்னிதானத்தில், தென்னங்கன்று நடுவதற்கு பணம் வசூலிக்க, நிர்வாக அதிகாரி தடைவிதித்துள்ளார். சபரிமலைக்கு, 18 ஆண்டுகள் சென்றவர், குரு சுவாமி என்று அழைக்கப்படுகிறார். 18 மலை நிறைவு பெறும் போது, அதன் அடையாளமாக, இருமுடி கட்டுடன், ஒரு தென்னங்கன்றும் கொண்டு செல்லும் பக்தர், அதை கோவிலின் பின்புறம், பஸ்மகுளம் அருகே நடவு செய்வார். இப்போது ஆயிரக்கணக்கான தென்னங்கன்றுகள் வருவதால், அவை டிராக்டரில் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதை பயன்படுத்தி, சிலர், தென்னங்கன்று நடவு செய்வதற்கு முன், பூஜை நடத்த வேண்டும் என கூறி, பணம் வசூல் செய்து வந்தனர். இதற்கு, 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி, சந்திரசேகரன், தென்னங்கன்று நடவு பூஜைக்கு தடை விதித்தார். இதை கண்காணிக்கஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.