பதிவு செய்த நாள்
07
டிச
2017
10:12
நரசிங்கபுரம்: கால்நடைகளின் கோமாரி நோய் தீர்க்கும், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மந்திரக்கலை, சேலம் வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். ஆத்துார் அருகே, நரசிங்கபுரத்தில், கடந்த, 3ல், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன், மந்திரக்கல் கண்டுபிடித்து ஆய்வு செய்தார். அதேபோல், தலைவாசல் அருகே, புத்துார், நத்தக்கரை உள்ளிட்ட கிராமங்களிலும், மந்திரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: ஆங்கில மருத்துவத்துக்கு முன், தமிழகத்தில் சித்த மருத்துவம் மற்றும் மூலிகைகள், மனிதர்களுக்கு மட்டுமின்றி, நாட்டு வைத்திய முறையில், கால்நடைகளுக்கு நோய்கள் குணப்படுத்தும் மருந்தாக, மந்திரக்கல் பயன்படுத்தப்பட்டது. கடந்த, 18ம் நுாற்றாண்டில், வழிபாட்டு முறைகளிலும், நோய்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, கல்வெட்டு சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், பெரும்பாலான கிராமங்களில், சன்னியாசி கல், மந்திரக்கல் என்றழைக்கப்படும் கோமாரிக்கல் அதிகளவில் உள்ளன. இதன் ஒருபுறம், நிறைய கோடுகளுடன் கட்டங்கள் போடப்பட்டு, அதில் தமிழ் மற்றும் புரியாத மொழியில் எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. மறுபுறம், சக்கரம், கோடுகள் போன்று வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள சன்னியாசிகள், கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது, இந்த கல்லை சுற்றி வரச்செய்து, மந்திர வார்த்தைகளை சொல்லி மூலிகைகளை கொடுத்து, கால்நடைகளின் நோயை குணமாக்கினர்.
கோமாரி நோய், கால்நடைகளுக்கு அதிகம் வந்தபோது, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகரித்தது. அதனால், இது, சன்னியாசி கல், கோமாரிக்கல், மந்திரக்கல் என, அழைக்கப்படுகிறது. நவீன மருத்துவ முறையால், இந்த வழக்கம் நின்றுவிட்டாலும், பொங்கல் பண்டிகையின்போது, கோமாரிக்கல்லை சுத்தம் செய்து, கால்நடைகளை அழைத்து வந்து படையல் செய்கின்றனர். இதன் அருகே, சிறு அளவில் பள்ளம் தோண்டி, அதில் தண்ணீரை விட்டு, கால்நடைகளை தாண்டி வரச்செய்கின்றனர். இப்படி செய்தால், கால்நடைகளுக்கு நோய் வராது என்பது மக்களின் நம்பிக்கை. ஆங்கிலேயர் காலத்தில், காலரா (வயிற்றுப்போக்கு), பிளேக் நோய் (எலி காய்ச்சல்) போன்ற நோய்கள் வந்தபோது, அதிகளவில் மக்கள் உயிரிழந்தனர். மந்திரக்கல்லை, மனிதர்களும் வழிபட்டு குணமடைந்ததால், இந்த கற்கள், தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.