பதிவு செய்த நாள்
09
டிச
2017
11:12
சாமராஜ்நகர் : கர்நாடக மாநிலம், பந்திப்பூர் தேசிய பூங்காவில் உள்ள, பழமையான கோபால சுவாமி கோவிலில், ஒரு யானை தினசரி பிரசாதம் வாங்கி செல்வதால், பக்தர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள, பந்திப்பூர் தேசிய பூங்காவில், யானை, புலி, புள்ளி மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, ஹிமவத் கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், மாலை நேர பூஜையின்போது வரும் ஒரு யானை, கோவில் பிரகாரத்தை வலம் வந்து, பூசாரியிடம் பிரசாதம் பெற்றுச் செல்கிறது.
இது குறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது: வளர்ப்பு யானைகள் கோவிலுக்கு வருவதுண்டு. ஆனால், காட்டு யானை கோவிலுக்கு வருவது வியப்பளிக்கிறது. இரண்டு வாரங்களாக, மாலை நேர பூஜையின் போது வரும் காட்டு யானை, பூஜை முடியும் வரை, கோவில் வாசல் முன் அசையாமல் நிற்கிறது. பின், கோவிலை வலம் வந்து, பூசாரி கொடுக்கும் தேங்காய், வாழைப்பழ பிரசாதங்களை பெற்றுச் செல்கிறது. இந்த யானையால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.