பதிவு செய்த நாள்
09
டிச
2017
11:12
துாத்துக்குடி,: திருச்செந்துார் முருகன் கோயிலில், மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி கூறியுள்ளதாவது: மார்கழி மாதம் டிச.16-ம் தேதி தொடங்கி 2018 ஜனவரி 13-ல் நிறைவடைகிறது.
மார்கழி மாதத்தில் கோயில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூபம், 4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4:45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6:00 -- 7:00 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8:45 மணி முதல் 9:00 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, பிற்பகல் 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ராக்கால அபிஷேகம், மாலை 6:45 மணி முதல் 7:00 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7:30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8:00- -8:30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று, கோயில் நடை திருக்காப்பிடப் படும்.ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கும், ஜனவரி 2ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2:00 மணிக்கும், ஜனவரி 14-ம் தேதி தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை 1:00 மணிக்கும் கோயில் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். வழக்கமாக காலை 5:00 மணிக்கு நடை திறந்து இரவு 9:00 மணிக்கு நடை சாத்தப்படும். மார்கழி முழுவதும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.