பதிவு செய்த நாள்
09
டிச
2017
11:12
குன்றத்துார்:கோவூர் சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம் எப்போது நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சென்னை, குன்றத்துார் அடுத்த கோவூரில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. நவகிரக புதன் தலமாக விளங்கும் இந்த கோவிலில், தினமும் ஏராளமானோர் வந்து, சுவாமியை வழிபடுகின்றனர். அசோக மரங்களுக்கு இடையே, 85 அடி உயர கோபுரத்துடன் உள்ள இக்கோவிலில், 1984ம் ஆண்டுக்கு முன் வரை, வைகாசி விசாகம் விழா, 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
இதன் ஏழாம் நாள் திருத்தேர் விழாவில், ஒரே நேரத்தில், ஐந்து தேர்கள், கோவிலின் நான்கு மாடவீதிகளை சுற்றிவரும். இந்த விழாவில், கோவூர், தரப்பாக்கம், தண்டலம், இரண்டாம்கட்டளை, குன்றத்துார், கெருகம்பாக்கம், பெரியபணிச்சேரி, பரணிபுத்துார், மவுலிவாக்கம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபடுவர். இந்நிலையில், நிர்வாக குறைபாட்டால், தேரோட்டம் விழா, 34 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தேர் திருவிழா நடக்காததால், கோவில் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் ஒன்று, பராமரிப்பின்றி மக்கி, மண்ணோடு மண்ணாகி விட்டது. எஞ்சியுள்ள தேரும், மழை, வெயிலில் சேதமடைந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்து அறநிலையத் துறையின் கீழ் கோவில் இருந்தாலும், பரம்பரை தர்மகர்த்தாவின் முழு கட்டுப்பாட்டிலேயே கோவில் இயங்குகிறது. தேரை சீரமைத்து அல்லது புது தேரை தயாரித்து, தேர் திருவிழாவை மீண்டும் நடந்த வேண்டும் என, பல ஆண்டுகளாக எதிர்பார்க்கிறோம். தேரை சீரமைக்க நன்கொடையாளர்கள் முன் வந்தாலும், அவர்களிடம் தேரை சீரமைக்கும் பணிக்கு தேவையான பணத்தை மட்டும் வழங்க வேண்டும் என, கோவில் நிர்வாகத் தினர் கூறுகின்றனர். இதனால், நன்கொடையாளர்கள் பணம் அளிக்க தயங்குகின்றனர். நிலங்கள் இல்லாத கோவில்கள் முறையாக பராமரிக்கப்படும் நிலையில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு, பல ஏக்கர் நிலம் இருந்தும், விழாக்கள், தேரோட்டம் நடத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது. கோவிலில் திருப்பணி குழு அமைத்து, தேரை சீரமைத்து, மீண்டும் தேர் விழா நடத்த, அறநிலையத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குத்தகை தொகை வசூல் இல்லை: இந்த கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கர்நாடக சங்கீத மூர்த்தி, தியாகராயரால் பாடல் பெற்ற ஒரே சைவ தலம் இந்த கோவில் மட்டுமே. இந்த கோவிலுக்கு சொந்தமான, 150 ஏக்கர் நிலம், குத்தகைதாரர்களிடம் உள்ளது. அவர்கள், பல ஆண்டுகளாக, குத்தகை தொகை செலுத்தவில்லை. இதனால், பராமரிக்க பணம் இன்றி, கோவிலுக்கு சொந்தமான பூந்தோட்ட இடங்கள் அனைத்தும் புதர் மண்டியுள்ளன. இங்கிருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. குறிப்பாக, பகல் நேரத்திலேயே, இங்கு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சமூக ஆர்வலர்கள், கோவூர்.