பதிவு செய்த நாள்
11
டிச
2017
11:12
வேலுார்: வேலுார் அருகே, விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறு விழாவையொட்டி, நள்ளிரவு சிம்மகுளத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் புனித நீராடினர்.
வேலுார் அடுத்த விரிஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு விழா, சிறப்பாக நடக்கும். அன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு கோவிலில் உள்ள சிம்மகுளத்தில், பெண்கள் புனித நீராட வேண்டும். பின், அங்குள்ள பாலாற்று நீர், பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, அங்கேயே ஈரத்துணியுடன் படுத்து துாங்க வேண்டும். அப்போது, அவர்களது கனவில், இறைவன் ஒளியாக தோன்றி, வேண்டிய வரம் கொடுப்பார். பேய், பிசாசு, பில்லி சூனியம், தீவினை அகலும். குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு கடைசி ஞாயிறு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை செய்து, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோரால், சிம்மகுளம் திறக்கப்பட்டது. வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்கள், ஆந்திரா மாநிலம், சித்துார், திருப்பதி, கடப்பா, கர்னுால், கர்நாடகா மாநிலம், பெங்களூரு, மைசூரு, மாண்டியா, மங்களூரு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள், சிம்மகுளத்தில் புனித நீராடி, கோவில் மண்டபத்தில், ஈரத்துணியுடன் படுத்து துாங்கினர். நேற்று காலை, 6:30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரி, 9:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா, மதியம், 12:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. விழாவுக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.