பதிவு செய்த நாள்
11
டிச
2017
12:12
திருவொற்றியூர்:கோவில் தெப்பக் குளத்தில் தேங்கிய மழைநீரில், தெப்போற்சவம் நடத்துவது சாத்தியமா என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.சென்னை, திருவொற்றியூரில் உள்ளது, தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில்.
ஏமாற்றம்: பழமை வாய்ந்த இக்கோவிலில், மாசி மாதம், பிரம்மோற்சவம், தைப்பூச திருவிழா, நவராத்திரி, சிவராத்திரி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.கோவில் வெளியில் உள்ள தெப்பகுளத்தில் தண்ணீர் தேங்காததால், 10 ஆண்டுகளாக தெப்போற்சவம் நடக்கவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், 2015ல், ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில், குளம் பாதியளவிற்கு நிரம்பி, 2016 ஜனவரியில், 10 ஆண்டுகள் கழித்து, தெப்போற்சவம் நடந்தது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.அதன் பின், வடிகால்களில் ஏற்பட்ட அடைப்பு, உடைப்புகளை கவனிக் காமல் விட்டதால், மழைநீர் குளத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. அதை சரி செய்ய, கோவில் நிர்வாகமும், மாநகராட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சமீபத்திய மழையில், குளத்தில் மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரில், தெப்போற்சவம் நடப்பது சாத்தியமா என, இப்பகுதிவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பணம் விரயம்: தேங்கிய மழைநீர் வற்றியவுடன், 26 லட்சம் ரூபாய் செலவில் குளத்தை சீரமைத்து, களிமண்ணை குளத்தில் பரப்பி, குளத்திற்கு வரும் மழைநீர் பூமிக்குள் வடியாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கோவில் குளத்திற்கு வந்த கழிவுநீரை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது லட்சக்கணக்கில் செலவு செய்ய உள்ளது பண விரயம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தாண்டு தெப்பத் திருவிழா நடப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என, பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.