பெருமாள் கோயில்களில் திருமாலின் திருவடிகளைத் தலையில் தாங்குவதாக பாவித்து செய்யும் வழிபாடு சடாரி. இதனை ஸ்ரீசடாரி என்று குறிப்பிடுவர். ஸ்ரீ என்பது லட்சுமியையும், சடாரி என்பது திருமாலையும் குறிக்கும். இதன் மகிமையை பாதுகா ஸஹஸ்ரம் என்னும் நூலில் வேதாந்ததேசிகர் பாடியுள்ளார். சடம் என்னும் ஒருவகை வாயு தீண்டுவதால் தான் உயிர்களுக்கு அறியாமை உண்டாகிறது. அந்த வாயு மீது கோபம் கொண்டு விரட்டியதால் நம்மாழ்வாருக்கு சடகோபன் என்ற பெயர் ஏற்பட்டது. எனவே சடாரியை நம்மாழ்வாரின் சொரூபமாக போற்றுவர். இதனைத் தாங்கும்போது பெருமாள், தாயார் இருவரின் திருவடிகளையும் தலையில் தாங்குவதாக ஐதீகம்.