சிலர் பசுத்தோல் போர்த்திய புலிகளாய் இருப்பார்கள். அதாவது, மற்றவர்களுக்கு, நீ நல்லவனாய் இரு. நாலு பேருக்கு நன்மை செய், தர்மம் செய், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே, பிற பெண்களைப் பார்க்காதே! என்றெல்லாம் சொல்வார்கள். நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று மேடைகளில் முழங்குவார்கள். ஆனால், மக்களின் பணத்தை சூறையாடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு என்ன கதி வரும் என்பதை குர்ஆன் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ஒரு மனிதன் இறுதித்தீர்ப்பு நாளில் கொண்டு வரப்பட்டு நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும்! அக்குடலை மாலை போல சுற்றிக் கொண்டு நரகத்தைச் சுற்றுவான். இதைப்பார்த்து மற்ற நரகவாசிகள் ஒன்று கூடி அவனிடம், உனக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? நீ நன்மைகள் புரியும்படி உலகில் எங்களுக்கு போதித்துக் கொண்டு தானே இருந்தாய்? தீமை செய்யாதே என்று சொல்லி எங்களைத் தடுத்துக் கொண்டிருந்தாயே!
இப்படிப்பட்ட நற்செயல்களை புரிந்தும் நீ ஏன் இங்கே வந்தாய்? என்று கேட்பார்கள்.அந்த மனிதன், நான் உங்களுக்கு நன்மை புரியும்படி போதித்துக் கொண்டு இருந்தேன். ஆனால், நானோ அதன் அருகில் கூட செல்லாமல் இருந்தேன். தீமைகளை விட்டு உங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நானோ அந்தத் தீமைகளைப் புரிந்து கொண்டிருந்தேன், என்று பதிலளிப்பான். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஊருக்கு உபதேசம் செய்து விட்டு, அதைக் கடைபிடிக்காதவர்கள் தங்கள் கழுத்தில் தங்கள் குடலையே மாலையாகப் போட்டுக் கொண்டு நரகத்தை சுற்ற வேண்டி வரும். இது தேவைதானா! சிந்தியுங்கள்!