சிலர் காரணமே இல்லாமல் பிறரால் சபிக்கப்படுகிறார்கள். காரணமே இல்லாமல் சிலர் திட்டு வாங்குகிறார்கள். சிலர் அநியாயமாக நடத்தப்படுகிறார்கள். இந்த சமயத்தில் நீங்கள் கொதித்து எழுந்து விட வேண்டாம். அமைதியாய் இருங்கள். இப்படிப்பட்ட வேளைகளில் இயேசு என்ன செய்தாரோ, அதையே நீங்களும் செய்யுங்கள். நீங்கள் இயேசுவின் சாயலை அடைவீர்கள், என்று அறிவுரை கூறுகிறார் ஒரு அறிஞர். தன் மீது பொய்க் குற்றம் சுமத்தப் பட்டபோது, இயேசுநாதர் அமைதி காத்தார். சிலுவையில் அறையப்பட்டபோது மகிழ்ச்சியுடன் அதை ஏற்றார். அது மட்டுமா! இவர்கள் செய்வது இன்னதென தெரியாமல் செய்கிறார்கள், பிதாவே இவர்களை மன்னியும் என்றார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும், தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, என்று ஏசா: 53:7 வசனம் சொல்கிறது. பைபிளைப் படிப்பதுடன், அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களையும் பின்பற்றினால் இக்கட்டான நேரங்களிலும், கோபமூட்டப்படும் நேரத்திலும் கூட நம் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.