பதிவு செய்த நாள்
13
டிச
2017
11:12
சிவகங்கை: சிவகங்கை அருகே தமறாக்கியில் மதுஎடுப்பு திருவிழாவில் 200 க்கும் மேற்பட்டோர் உடம்பில் சகதியை பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தமறாக்கி தெற்கு, தமறாக்கி வடக்கு, குமாரப்பட்டி, கள்ளங்குளம் ஆகிய கிராமங்கள் ‘தமறாக்கி நாடு’ என்று கூறப்படுகிறது. தமறாக்கி கலிதீர்த்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு, ஏழைகாத்த அம்மன் கோயில் மதுஎடுப்பு திருவிழா நவ., 28 காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடந்தது. அதே சமயத்தில் மது எடுப்பதற்காக 10 வயதிற்குட்பட்ட 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம் புரவி எடுப்பு விழா நடந்தது. குதிரை பொட்டலில் இருந்து மந்தைச்சாவடிக்கு 2 கிராம குதிரைகள் மற்றும் 20 நேர்த்திக்கடன் குதிரைகள் எடுத்து செல்லப்பட்டன. தொடர்ந்து ஊர் சுற்றி கலிதீர்த்த அய்யனார் கோயில் வளாகத்தில் குதிரைகளை வைத்தனர். நேற்று மதுஎடுப்பு விழா நடந்தது. அம்மன் போன்று நகை அலங்காரம் செய்யப்பட்ட ஏழு சிறுமிகள் மதுக்களை சுமந்து சென்றனர். 200 க்கும் மேற்பட்டோர் நேர்த்திக்கடனாக தங்களது உடம்பில் சகதியை பூசிக்கொண்டு சென்றனர்.
தெருக்கள்தோறும் 50 க்கும் மேற்பட்ட ‘கிடாக்கள்’ வெட்டப்பட்டன. ஐந்து கி.மீ., நடந்து சென்று காட்டுப்பகுதியில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயிலுக்கு மதுக்களை எடுத்துச் சென்றனர். இதில் தமறாக்கி, குமாரப்பட்டி, கள்ளங்குளம், ஆலங்குளம், காரம்பட்டி, பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்று (டிச., 13) மாடு அவிழ்ப்பு, சேவல் கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தமறாக்கி ரவி, ஜெயபிரகாஷ் கூறியதாவது: நேர்த்திக்கடனாக விடப்படும் ‘கிடாக்கள்’ அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெட்டப்படும். ஒரே வெட்டில் தலை துண்டாகிவிடும். தலை தொங்கினால் அடுத்தமுறை திருவிழா நடக்கும்போது இரண்டு ‘கிடாக்கள்’ நேர்த்திக்கடனாக விட வேண்டும். மேலும் தமறாக்கி நாட்டைச் சேர்ந்த கள்ளங்குளம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் 2 நாட்களுக்கு முன்பே தமறாக்கி வந்துவிடுவர். இரண்டு நாட்களும் தொடர்ந்து அன்னதானம் நடக்கும். ‘நோய் வராமல் நல்ல உடல்நிலையில் இருக்க வேண்டும்; திருமணம் ஆக வேண்டும்; தொழில் விருத்தி’ போன்றவைக்காக உடலில் சகதியைபூசி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். மேலும் கையில் ஈச்சங்குச்சியில் துணி தொகுப்புடன் செல்வர். கோயிலை அடைந்ததும், மூன்றுமுறை சுற்றிவந்து குளித்துவிடுவர், என்றனர்.