பதிவு செய்த நாள்
13
டிச
2017
11:12
காஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவிலின் புதிய உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தொடர்புடைய, ஸ்தபதி, செயல் அலுவலர் உள்ளிட்ட ஒன்பது பேரும் முன்ஜாமின் எடுக்க முடிவு செய்துள்ளனர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின், சோமாஸ்கந்தர் எனப்படும் உற்சவர் சிலை, பெரும் பகுதி தங்கத்தால் செய்யப்பட்டு, 1,300 ஆண்டுகள் பழமையானது.இந்த சிலை பழுதடைந்ததால், 2015ல், இனி பயன்படுத்த முடியாது என கூறி, புதிய உற்சவர் சிலை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் மூலம், கடந்தாண்டு புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலைக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அலைக்கழிப்பு: ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியும்படி, விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தவில்லை என, அப்போது குற்றஞ்சாட்டப்பட்டது.இந்நிலையில், புதிய உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவரது இரு மகன்களும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். புதிய சிலை செய்ததில் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும்; சரிவிகிதத்தில் தங்கத்தின் அளவும் சேர்க்கப்படவில்லை எனவும், சிவகாஞ்சி போலீசில் புகார் தெரிவித்தனர்.ஆனால், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதியாமல், தொடர்ந்து அலைக்கழித்து வந்தனர். இந்நிலையில், புதிய சிலையில் சேர்க்கப்பட வேண்டிய, 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்படாமல் முறைகேடு நடந்ததாக காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்குடன், பழைய உற்சவர் சிலையின் பின் இருந்த, திருவாச்சி எனப்படும் உலோக வளைவு அலங்காரமும் திருடு போயிருப்பதாக மனுவில் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனாட்சி, இரு விவகாரத்தையும் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக, சிவகாஞ்சி காவல் நிலையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
எதிர்பார்ப்பு: அப்போது, இரு புகாரிலும் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருந்ததால், தனித்தனி வழக்குகளை சிவகாஞ்சி போலீசார் பதிவு செய்தனர்.உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு இருப்பதாக பதியப்பட்ட வழக்கில், தலைமை ஸ்தபதி, முத்தையா, செயல் அலுவலர், முருகேசன், ஸ்தானிகர், ராஜப்பா, செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கர், பரத்குமார், வினோத் குமார் மற்றும் மாசிலாமணி ஆகிய, ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. புதிய உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், காஞ்சிபுரம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது பேரும், கிலியில் உள்ளனர். இரு வழக்குகளும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால், இவ்வழக்கு விசாரணை அடுத்த சில நாட்களில் சூடுபிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர்களில் சிலரை, கைது செய்ய வாய்ப்பு இருப்பதால், முன்ஜாமின் கேட்டு விண்ணப்பிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். கோவில் செயல் அலுவலர், முருகேசனை, இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகள் கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டாலும், விசாரணைக்கு சில சிக்கல்கள் இருப்பதாகவே கருதப்படுகிறது. சிறிய உலோக பொருளாக இருந்தால், அதில் கலக்கப்பட்டிருக்கும் உலோகங்களின் அளவை கண்டறிய முடியும். ஆனால், அதிக எடையுடைய சுவாமி சிலையில், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் அளவை எந்த கருவி மூலம் கண்டறிய முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பக்தர்கள் கோரிக்கை: புதிய உற்சவர் சிலையில் முறைகேடு நடந்ததா என, எழுந்த பிரச்னைகளுக்கு மத்தியில், மேலும் பல பிரச்னைகள் ஏகாம்பரநாதர் கோவிலில் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய, இந்து சமய அறநிலையத் துறை முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது. கோவிலில் உள்ள சிலைகள், நகைகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்; போதிய கண்காணிப்பு கேமராக்களை கோவிலில் வைக்க வேண்டும். கோவில் கல்வெட்டுகள் மாயமாவதால் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.கோபுரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். அன்னதானம் வழங்கும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் உரிய ரசீது தர வேண்டும்.கோவில் நிலத்தில் வாடகை பாக்கி வசூலிக்க வேண்டும் போன்ற பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.