சபரிமலையில் 6 லட்சம் அழைப்புகள் : 1000 ஜி.பி. டேட்டா பயன்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2017 12:12
சபரிமலை: சபரிமலையில் பி.எஸ்.என்.எல். மூலம் ஒரு நாளில் 6 லட்சம் அழைப்புகள், 1000 ஜிபி டேட்டா பயன்படுத்தப்படுவதாக சன்னிதானம் அதிகாரி ஜெயராஜ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சபரிமலையில் 9 இடங்களில் 3ஜிசேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3ஜி, 2ஜி மூலம் ஒரே நேரத்தில் எட்டாயிரம் பேர் பேசமுடியும். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்ப அலைக்கற்றை அகலத்தை அதிகரிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பாதையில் சிக்னல் தடை படாமல் இருக்க பிலாப்பள்ளியில் தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது.
பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் 12 மினி டவர்கள் நிறுவப்பட்டுள்ளது. பாண்டிதாவளம், ஜோதிநகர், பம்பை ஆகிய இடங்களில் டெலிகாம் சென்டர்கள் செயல்படுகிறது. இங்குள்ள எஸ்.டி.டி. பூத்துகளில் இந்தியாவில் எங்கும் ஒரு ரூபாய்க்கு பேசமுடியும். இதுபோல போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் சென்றால் இன்டர்நெட் மையங்களில் ஐந்து ரூபாய்க்கு ஒரு மணி நேரம் பிரவுசிங் செய்யலாம். பிரிண்ட் அவுட் எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை நடை திறந்த முதல் நாள் 90 ஆயிரம் அழைப்புகள் சபரிமலையில் இருந்து வெளியே சென்றது. இதுவரை மகரவிளக்கு நாளில் மட்டுமே அதிக பட்சமாக 4 லட்சம் அழைப்புகள் செல்வது வழக்கம். ஆனால் கடந்த 8-ம் தேதி அதிகபட்சமாக 6 லட்சம் அழைப்புகள் சென்றுள்ளது. தினசரி ஆயிரம் ஜிபி டேட்டா வரை பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களுக்கு பல சிறப்பு திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.