பதிவு செய்த நாள்
14
டிச
2017
10:12
புதுடில்லி: அமர்நாத் பனிலிங்க கோவிலில் மணியடிக்கவும், பக்தர்கள், மந்திர கோஷங்கள் எழுப்பவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலில், ஆண்டுதோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, பனி லிங்கம் உருவாகிறது. இதை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், உயிரிழக்க நேரிடுகிறது என, என்.ஜி.டி., எனப்படும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை விசாரித்த, என்.ஜி.டி., பக்தர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர தவறியதற்காக, அமர்நாத் கோவில் வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. பக்தர்கள் இறப்பதை தடுக்க, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, ௨௦௧௨ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்றாததற்கும், கண்டனம் தெரிவித்த, என்.ஜி.டி., இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அமர்நாத் கோவில் வாரியத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அமர்நாத் கோவில் வாரியம், என்.ஜி.டி.,யிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதி, ஸ்வதேந்திர குமார் தலைமையிலான அமர்வு முன், நேற்று நடந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தங்களின் மொபைல் மற்றும் உடைமைகளை, கடைசி சோதனைச் சாவடியில் ஒப்படைக்க வேண்டும். பக்தர்களின் பொருட்களை வைக்க, தனி கட்டடத்தை, அமர்நாத் கோவில் வாரியம் கட்ட வேண்டும்.கடைசி சோதனைச் சாவடியிலிருந்து, ஒரே வரிசையில் தான், கோவிலுக்கு, பக்தர்கள் நடந்து செல்ல வேண்டும். கோவிலில் மணியடிக்கவோ, பக்தர்கள் மந்திர கோஷங்கள் எழுப்பவோ, தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவுகளை, அமர்நாத் கோவில் வாரியம் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.