பதிவு செய்த நாள்
14
டிச
2017
10:12
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1.08 லட்சம் வடை மாலை சார்த்தப்படுகிறது. இதற்காக வடை தயாரிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கல்லால் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். மார்கழி மாத மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, வரும், 17ல் கொண்டாடப்படுகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, 1.08 லட்சம் வடை மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடக்க உள்ளது. இதையொட்டி, வடைகள் தயாரிக்கும் பணி, கோவில் வளாக மண்டபத்தில் நடக்கிறது. திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் தலைமையிலான குழுவினர், பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, ரமேஷ் கூறியதாவது:வடைகள் தயாரிப்பதற்கு, 90 மூட்டை உளுத்தம் பருப்பு, 200 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ சீரகம் மற்றும் மிளகு, 135 கிலோ உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, 10 லட்சம் ரூபாயாகும். வடை தயாரிப்பு பணி, 24 மணி நேரமும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.